சிங்கப்பூர் கொடியுடைய ‘எம்.வி. வான் ஹை 503’ சரக்குக் கப்பல், கொழும்பில் இருந்து மும்பையின் நவா ஷேவாவுக்கு செல்லும் வழியில், கேரளாவின் பேப்பூர் கடற்கரை அருகே அரபிக் கடலில் 09.06.2025 திங்கட்கிழமை தீ விபத்துக்கு உள்ளானது.
கப்பலில் ஏற்பட்ட பல வெடிப்புகளைத் தொடர்ந்து தீப்பற்றியதால், 20 கன்டெய்னர்கள் கடலில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆபத்தான பொருட்கள் உட்பட நான்கு வகையான சரக்குகள் கப்பலில் இருந்ததாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கப்பலில் பணியாற்றிய 22 பணியாளர்களில் 18 பேர் கடலில் குதித்த நிலையில் மீட்கப்பட்டனர். 5 பேர் காயமடைந்த நிலையில், 4 பேர் இன்னும் காணவில்லை. இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை இணைந்து மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
எவ்வாறாயினும், கப்பல் மூழ்கவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன் கேரள கடற்கரையில் இதேபோன்ற விபத்து நிகழ்ந்ததால், சிலர் இதை திட்டமிட்ட சேதமாக சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விரிவான விசாரணை கோரப்பட்டுள்ளது.