2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செயற்பாடுகள் மற்றும் கடன் சேவைகளை தொடர்வதற்கான இடைக்கால கணக்கறிக்கை 05.12.2024 பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதோடு அது தொடர்பான விவாதம் 05.12.2024, 06.12.2024 நடைபெறவுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் 4 மாதங்களுக்கும், தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் அரசு சேவைகளை பராமரிக்க தேவையான நிதி இந்த இடைக்கால கணக்கறிக்கை மூலம் ஒதுக்கப்படவுள்ளது.
இடைக்கால கணக்கறிக்கையை தயாரிப்பதற்காக நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு நவம்பர் 25ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் திருத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தெரியவரும் என சபாநாயகர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மைய அனர்த்த நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு மீதான விவாதம் 04.12.2024 பிற்பகல் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் இது தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இடம்பெற்றது.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை அதிகரிக்க முறையான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இதன்போது குறிப்பிட்டுள்ளார்.