இணையவழி நிதிமோசடியில் ஈடுபட்ட 30 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நீர்கொழும்பு பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
அதேநேரம், முன்னதாக இலங்கையில் இருந்து இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 115 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பல பகுதிகளில் முன்னெடுத்த சுற்றிவளைப்புக்களின் போது குறித்த 115 பேரும் கைதாகினர்.
தலங்கம, மாதிவெல மற்றும் நீர்கொழும்பு – கொச்சிக்கடை ஆகிய பகுதிகளில் வைத்து அவர்கள் கைதாகினர்.
கைதானவர்களிடம் இருந்து மடிக்கணனி, கையடக்கத் தொலைப்பேசிகள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை இணையவழி ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கடந்த திங்கட்கிழமை நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் வைத்து 33 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைதானவர்கள் பாகிஸ்தான், நேபாளம், மலேசியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.