இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பலநாள் மீன்பிடிப் படகு 02.11.2025 காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகு ஒன்று நேற்று கடற்படையினரால் நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டது.
இலங்கை கடற்படை அதிகாரிகள், கடற்படைக்குச் சொந்தமான நீண்ட தூரம் செல்லக்கூடிய கப்பல்களைப் பயன்படுத்தி குறித்த படகை நெருங்கினர்.
பின்னர் பலநாள் படகைத் தமது கட்டுப்பாட்டிற்குள் எடுத்த கடற்படையினர், படகிலிருந்த 6 சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.
இந்த பலநாள் மீன்பிடிப் படகில் 100 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் இருக்கலாம் எனவும் அதில் ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.










