பாடசாலை நேரத்தை மாற்றுவது தொடர்பில் ஜனவரி மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் உரிய பதில் கிடைக்கப்பெறாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் (Harini Amarasuriya) இடையிலான சந்திப்பொன்று நேற்று (22) காலை கல்வி அமைச்சில் நடைபெற்றது.
கல்விச் சீர்திருத்தங்களுடன் பாடசாலை நேரத்தை மாற்றுவது தொடர்பிலேயே இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் டிசம்பர் 12ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவிருந்த போதிலும், அதனை மேற்கொள்ளவில்லை என தொழிற்சங்கங்கள் இதன்போது சுட்டிக்காட்டின.
இந்தநிலையில் இன்றைய சந்திப்பின் போது, பிரதமர் தமது கருத்துக்களுக்கு ஓரளவு செவிசாய்த்ததாகவும், அது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்ததாகவும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.










