மகளிர் ஆசிய கோப்பை உட்பட ஆசிய கிரிக்கெட் பேரவை நடத்தும் அனைத்து வகையான தொடர்களிலிருந்தும் விலகுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.
அண்மைக்காலமாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மகளிர் ஆசிய கிண்ணம் உட்பட இனி ஆசிய கிரிக்கெட் பேரவை நடத்தும் அனைத்து வகையான தொடர்களிலிருந்தும் விலக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது.
அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற உள்ள மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து இந்தியா விலகுவதாக ஆசிய கிரிக்கெட் பேரவைக்கு பிசிசிஐ தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தற்போது ஆசிய கிரிக்கெட் பேரவைக்கு பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான மொஹ்சின் நக்வி தலைமை தாங்குகிறார். இதுதான் இந்தியாவின் விலகலுக்கு காரணமாக உள்ளது.
“இது நாட்டின் உணர்ச்சி என்றும், ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இருக்கும்போது அதில் தங்களால் விளையாட முடியாது” என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கிண்ணத்தில், இலங்கை அணியை வீழ்த்தி, இந்திய அணி சம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.