பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள இந்நாட்டு மக்களை வாழ வைப்பதில் “அஸ்வெசும” மற்றும் “உறுமய” வேலைத் திட்டங்கள் பெரும் பங்காற்றுவதாகவும், நிவாரணம் கிடைக்க வேண்டிய அனைவருக்கும் துரிதமாக நிவாரணம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
“அஸ்வெசும” மற்றும் “உறுமய” திட்டங்களை முறையாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அரச அதிகாரிகளின் ஆதரவு தேவை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் இன்று (29) முற்பகல் நடைபெற்ற “அஸ்வெசும” வேலைத் திட்டத்தின் அமுலாக்கம் தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக வில்கமுவ கிராம அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி முன்னிலையில் அறிவித்தமையும் விசேட அம்சமாகும்.
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி ஆரம்பமாகியதோடு இன்று (29) வரை 35,920 புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 14,537 விண்ணப்பங்கள் பிரதேச செயலாளர் ஊடாகவும், 21,383 விண்ணப்பங்கள் இணையத்தளத்தின் ஊடாகவும் கிடைத்துள்ளன.
இன்று வரை அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான அதிகளவான விண்ணப்பங்கள் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து கிடைத்துள்ளன. அந்த எண்ணிக்கை 4,892 என்பதோடு கண்டி மாவட்டத்தில் இருந்து 4,708 விண்ணப்பங்களும் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து 2,971 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் இருந்து 2,243 விண்ணப்பங்களும், கொழும்பு மாவட்டத்தில் 2,099 விண்ணப்பங்களும், மொனராகலை மாவட்டத்தில் இருந்து 2,017 விண்ணப்பங்களும், கம்பஹா மாவட்டத்தில் இருந்து 1,887 விண்ணப்பங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.
குருநாகல் மாவட்டத்தில் இருந்து இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1,633 ஆகும். புத்தளம் மாவட்டத்தில் இருந்து 1,632 விண்ணப்பங்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து 1,408 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 1,405 விண்ணப்பங்களும், பதுளை மாவட்டத்தில் இருந்து 1,289 விண்ணப்பங்களும், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 1,166 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன. காலி மாவட்டத்தில் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 981 என்பதோடு ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து 954 விண்ணப்பங்களும், அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 782 விண்ணப்பங்களும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 687 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன.
இதேவேளை, கேகாலை மாவட்டத்தில் இருந்து 570 புதிய விண்ணப்பங்களும், யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 525 புதிய விண்ணப்பங்களும், மாத்தறை மாவட்டத்தில் இருந்து 472 விண்ணப்பங்களும் வந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 451 விண்ணப்பங்களும், மாத்தளை மாவட்டத்தில் இருந்து 421 விண்ணப்பங்களும், வவுனியா மாவட்டத்தில் இருந்து 389 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 183 புதிய விண்ணப்பங்களும், மன்னார் மாவட்டத்தில் இருந்து 155 புதிய விண்ணப்பங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.
முதல் கட்டத்தின் கீழ், சுமார் 2 மில்லியன் மக்கள் ஏற்கனவே நிவாரணங்களைப் பெற்று வருகின்றனர். இரண்டாவது கட்டத்தின் கீழ், புதிய விண்ணப்பதாரர்களுடன் 2.4 மில்லியன் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். ஜனாதிபதி ஒருவர் வில்கமுவ பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்த முதல் தடவை என்பதைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிர்வாகப் பிரிவு, கணக்குப் பிரிவு மற்றும் நிதிப் பிரிவு ஆகியவற்றுக்குச் சென்று பணிகளை பார்வையிட்டார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதேச செயலகப் பதிவுப் புத்தகத்தில் குறிப்பொன்றையும் பதிந்தார்.
பின்னர் மாத்தளை பிரதேச செயலக பிரதான கேட்போர் கூடத்தில், மாத்தளை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “அஸ்வெசும” வேலைத் திட்டத்தின் செயற்பாடுகள் மற்றும் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து சாதகமான பதில்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அஸ்வெசும பயனாளிகளுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, அவர்கள் முன்வைத்த பல பிரச்சினைகளுக்கு அதே இடத்தில் உடனடித் தீர்வுகளை வழங்கியமை விசேட அம்சமாகும்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வில்கமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்களுடன் சிநேகபூர்வ சந்திப்பொன்றை நடத்தியதுடன், அவர்களது தொழில்சார் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினார். அஸ்வெசும மற்றும் உறுமய வேலைத் திட்டங்களுக்கு அவர்கள் வழங்கும் ஆதரவிற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.