அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவிற்குச் சொந்தமான மூன்று எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவற்படை தெரிவித்துள்ளதாக ஈரானிய அரச ஊடகமான IRNA செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களின் பின்னர் குறித்த கப்பல்கள் தீப்பிடித்து எரிவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், அமெரிக்க அல்லது பிரித்தானிய அதிகாரிகள் இதுவரை இந்தத் தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் தனது நாளாந்த அறிக்கையில், குறித்த கடல் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தொடர்பில் சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இனந்தெரியாத தாக்குதல்களினால் இரண்டு கப்பல்களில் தீ பரவியுள்ளதை அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், அந்தக் கப்பல்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவை என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதுள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு ஹோர்முஸ் ஜலசந்தி தற்போது மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான கடல் வழிகளில் ஒன்றாகக் கருதப்படும் இது, சர்வதேச வர்த்தகத்தின் ஒரு தீர்க்கமான சந்தியாகும்.









