தமிழர்கள் தமிழ் புத்தாண்டை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதங்களுமே தனி சிறப்புடையது, அவற்றுள் சித்திரை மாதம் தனித்துவமானது.
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்ற வார்த்தைக்கு ஏற்ப தமிழ் மக்கள் எல்லோரும் சித்திரை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடுகிறார்கள். காலநிலை மற்றும் பருவநிலை மாறுதல்களால் புதுவருடம் பிறப்பதை தான் புத்தாண்டு என கொண்டாடுகிறோம்.
பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும்.
சூரிய மேஷ ராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன ராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது.
பெரும்பாலும் ஏப்ரல் 14 தொடங்கும் தமிழ் ஆண்டு சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 நாட்களில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில (கிரகோரியன்) நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை என்பதே.