இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி முதல் இந்த செயற்பாடு இடம்பெறுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் 22.03.2024 இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வீதி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளின்றி உடனடியாக இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, விபத்து இடம்பெற்று ஒரு வருடத்திற்குள் சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம் 5 இலட்சம் ரூபாய் வரையான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடியும்.
அந்த தொகையை நாடளாவிய ரீதியாகவுள்ள காப்புறுதி நிறுவனங்களின் எந்தவொரு கிளையிலும் பெற்றுக்கொள்ளகூடிய வசதிகள் வழங்கப்படும்.
மாறாக பாதிக்கப்பட்டவர்கள் மேலதிகமான இழப்பீட்டுத் தொகையை பெற எதிர்பார்க்கும் பட்சத்தில் அவர்கள் நீதிமன்றத்தை நாட வேண்டும்.
இந்த நடவடிக்கை குறித்து காவல்துறை, பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.