இலங்கையில் பொருளாதார உரிமைகள் மீறப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாரென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
செங்கடலில் இலங்கையின் பொருளாதார உரிமைகளுக்கு ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படும் பட்சத்தில், அதற்கு எதிரான செயற்பாடுகளை இலங்கை முன்னெடுக்கும் என்றும், வலய – உலகளாவிய பிரச்சினைகளின் போது ஐக்கிய நாடுகள் சபையின் வேலைத்திட்டங்களுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை இலங்கை வழங்கும் என்றும் உறுதியளித்தார்.
திருகோணமலை சீனக்குடா விமானப்படை தளத்தில் 29.02.2024 இடம்பெற்ற இலங்கை விமானப்படை கெடட் அதிகாரிகளுக்கு அதிகாரவாணை அளிக்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
வரலாற்று காலத்திலிருந்தே இலங்கை உலக அமைதி – பிராந்திய சமாதானத்தை பாதுகாக்க அர்ப்பணித்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உலக சமாதானத்துக்காக நேரடியான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் வேளையில் முப்படையினரின் கடமை மற்றும் பொறுப்புணர்வுகள் எவ்வாறானவை என்பது குறித்தும் ஜனாதிபதி நினைவூட்டினார்.
இந்த விடுகை அணிவகுப்பு இலங்கை விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக இரவு நேரத்தில் நடத்தப்பட்டமை சிறப்பம்சமாகும்.
திருகோணமலை சீனக்குடா விமானப்படைத் தளத்திற்குச் சென்ற முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு விமானப்படை மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.
இதன்போது இலக்கம் 36, 37, 38 பாடநெறியை நிறைவு செய்த கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 16 பெண் கெடட் அதிகாரிகள், இலக்கம் 65 , 66 கெடட் பாடநெறியை நிறைவு செய்த 36 கெடட் அதிகாரிகள் மற்றும் இலக்கம் 17 , 18 கெடட் பாடநெறியை நிறைவு செய்திருக்கும் 5 பெண் அதிகாரிகளுக்கும், 2023 அமெரிக்க கெடட் அதிகாரியொருவரும் அதிகாரவாணையை பெற்றுக்கொண்டனர்.
அதனையடுத்து பயிற்சியில் சிறந்து விளங்கிய 05 கெடட் அதிகாரிகளுக்கும் பெண் கெடட் அதிகாரி ஒருவருக்கும் ஜனாதிபதியால் விருதுகள் வழங்கப்பட்டது.
அணிவகுப்புக்கு பெருமிதம் சேர்க்கும் வகையில் விமானப்படை இசைக்குழுவின் வண்ணமயமான நிகழ்ச்சியும், விமானப்படை வீரர்களின் பரசூட் சாகசங்களும் நிகழ்த்தப்பட்டன.
அதனையடுத்து வண்ணமயமான கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.