ஐ. ஏ. காதிர் கான்
ஹூதி கிளர்ச்சியாளர்களைக் கட்டுப்படுத்த எமது நாட்டு கடற்படைக் கப்பலை செங்கடலுக்கு அனுப்புவது தொடர்பாக ஜனாதிபதி கூறிய கருத்துக்கு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பதில் வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் நடவடிக்கைகளால், எமது நாட்டிலும் பொருட்களின் விலை அதிகரிக்கும். எனவே, நாமும் கடற்படையின் ஒரு பகுதியினரை, 250 மில்லியன் ரூபா செலவிட்டு இலங்கை கடற்படைக் கப்பலை ஈடுபடுத்தி, இந்த ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ( sea patrolling ) வேலைத்திட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என, ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்ததைக் கண்டேன்.
ஆம், ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் நடவடிக்கைகளால் எரிபொருள் விலை ஏற்றம் ஏற்படும் என்பது உண்மை. பல்வேறு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். வங்குரோத்து நாடாக இருந்துகொண்டா நாம் செங்கடலுக்குச் சென்று இந்த ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்?
உலகில் பணம் படைத்த ஏராளானமான நாடுகள் உள்ளன. அத்தகைய நாடுகளுக்கும் இந்த ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நாம் எல்லோரும் அறிந்த International Police Man எனும் பெயர் கொண்டு ஐக்கிய அமெரிக்கா உள்ளது. அந்நாட்டுக்கு நாம் மதிப்பளிக்கிறோம். அது ஓர் ஜனநாயக நாடு. இந்த அமெரிக்காவின் கண்ணை மூடிக்கொண்டு இந்த செயலைச் செய்ய முடியுமா?
நாம் சொல்கிறோம். 225 மில்லியனை அர்ப்பணித்து எமது கடற்படையை அனுப்புகிறோம். ஆனால், பழுதடைந்த கம்பியூட்டர்களைத் திருத்தப் பணம் வழங்குவது தவறான விடயமாக அவர்களுகதகவல் தொழில் நுட்ப அறிவை மேம்படுத்த கணனிகளை வழங்குவது அவர்களுக்கு தவறான விடயமாகத் தோன்றுகிறது.
225 மில்லியனை அர்ப்பணித்து, எமது கடற்படையை செங்கடலுக்கு அனுப்புவது என்னவொரு நகைப்புக்கிடமான செயலாகும். உலகில் பிரபல நாடுகள் உள்ளன. ஐக்கிய அமெரிக்க குடியரசு, ஐக்கிய இராச்சியம், NATO அங்கத்துவ நாடுகள். இவை வங்குரோத்தான நாடுகள் அல்ல. சர்வதேச கடல் சார் பயணப் பாதைகளின் சுதந்திரங்களை (International Maritime Freedom) பாதுகாக்க இந்நாடுகளால் முடியும்.
எமது இந்த வங்குரோத்து நாட்டில், மாணவர்களுக்கு மதிய உணவைக் கொடுக்க முடியாத நிலை. இதனால், மாணவர்கள் வகுப்பறைகளில் மயக்கமடைந்து விழுகின்றனர். வானளவிற்கு பொருட்களின் விலைகள் சென்றுள்ளன. சீமெந்து மூட்டையின் விலையும் தற்போது அதிகரித்துள்ளது. நிர்மாணத்துறையும் வீழ்ச்சி கண்டுள்ளது. கர்ப்பிணித் தாய்மார்கள், சிறு குழந்தைகள் முதல் அனைவரினதும் வாழ்க்கையும் சீரழிந்து போயுள்ளது.
அரசாங்கம் என்ன செய்கிறது. ஹூதி கிளர்ச்சியாளர்களைக் கட்டுப்படுத்த எமது நாட்டு கடற்படைக்கு, எமது நாட்டினது 250 மில்லியன் ரூபாவைச் செலவழித்து எமது கப்பலைப் போராட்டம் நடத்த அனுப்புகிறார்கள்.
நான் எமது நாட்டு பாதுகாப்புத் துறையினரைக் குறைத்து மதிப்பிடவில்லை. எமது நாட்டு பாதுகாப்புப் படைதான், எமது நாட்டில் 30 வருடங்களாக இருந்த யுத்தத்தை வெற்றி கொண்டார்கள். அந்த மரியாதை அவர்களுக்குண்டு. அவ்வாறு வெற்றி கொண்ட நாட்டை, குடும்பத்தின் பெயரால் வங்குரோத்தடையச் செய்து, வங்குரோத்தடையச் செய்த தரப்பினர்களின் பெரிய பாதுகாவலர், பின்தங்கிய பாடசாலைகளுக்கு நாம் கணனிகளை வழங்கினால், அவ்வாறு வழங்குவதல்ல முன்னுரிமை என்று கூறுகிறார். சுகாதாரத்துறையில் CT Scan இயந்திரம், MRI இயந்திரங்கள் செயலிழந்துள்ளன. இவற்றைச் செயற்பாட்டிற்குக் கொண்டு வருவது முன்னுரிமையல்ல,
செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களைக் கட்டுப்படுத்துவது முன்னுரிமை என்றே அவர் கூறுகிறார். யாரிடம் சென்று இதைச் சொல்வது. என்ன கதை இது. பொருட்களின் விலையைக் குறைக்க முடியாத இந்த அரசாங்கம், ஹூதி கிளர்ச்சியாளர்களை அடக்க 250 மில்லியன் செலவிட்டுள்ளது. நாடு வங்குரோத்து நிலையில் இருக்கும் வேளையில், முன்னுரிமை அளிக்க வேண்டிய பல விடயங்கள் இருந்த போதிலும், ஜனாதிபதி வேறு விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளார்.
( “பிரபஞ்சம்” தகவல் தொழில் நுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 62 ஆவது கட்டமாக, மினுவாங்கொடை நெதகமுவ கனிஷ்ட வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில், (06) சனிக்கிழமை கலந்து கொண்டு உறையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். )