அமெரிக்காவில் சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய இந்திய தொழிலதிபர்களின் விசா தடை செய்யப்படும் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக போதைப்பொருளை கடத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை அமெரிக்கா சேர்த்துள்ள நிலையில், கடத்தலில் தொடர்புடைய தொழிலதிபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் விசா தடை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தியாவில் அமெரிக்க தூதரகத்தின் எக்ஸ் பக்கத்தில்,
`போதைப்பொருள் கடத்தலில் சட்டவிரோதமாக ஈடுபட்ட நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான விசாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. கடத்தல் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கிய இந்திய அரசுக்கு நன்றி’’ என்று தெரிவித்துள்ளனர்
இந்தியா உட்பட 23 நாடுகளில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்து கடத்தப்படும் போதைப்பொருட்களால் அமெரிக்க குடிமக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, அமெரிக்க பாராளுமன்றத்தில் ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சட்டவிரோத பெண்டானில், ஹெரோயினைவிட 50 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது. இதனால், 18 முதல் 44 வயதுடைய அமெரிக்கர்களின் மரணத்திற்கு முக்கிய காரணமாக இந்த போதைப்பொருள் இருப்பதாகக் கூறும் அந்நாட்டு அரசு, 2024-இல் மட்டும் 48,000-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக தெரிவித்துள்ளது.










