ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில், இவ்வாண்டின் உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு, எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி முதல் 13 வரையிலான விஜயமொன்றை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர துபாயில் நடைபெறும் 2025ஆம் ஆண்டு உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ளதுடன், பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகள் குறித்து ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதுடன் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உப ஜனாதிபதியும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமையும் சந்திக்கவுள்ளார்.
மேலும், உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் பல நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களுடன் ஜனாதிபதி அநுர இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்வார்.
இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தகவல் தொழிநுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத் துறைகளில் உள்ள பல முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார்.